
திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டுகால உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாங்கள் இடியாப்ப சிக்கல் போன்ற சூழலில் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. எனக்கு, என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! எங்களின் சாதனைகளை மிஞ்சும் அளவுக்கு திமுக 2.0 ஆட்சி இருக்கும் என்று பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதல்வரின் அறிவிப்புகள்:
கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் புதிதாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.புதிதாக 2,600 கி.மீ கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக 1.80 லட்சம் நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,400ஆக உயர்த்தப்படும். இவர்களது பணி நிறைவில் வழங்கப்படும் ஒட்டு மொத்த தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.அங்கன்வாடி, சமையல் உதவியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.சிறப்பு ஓய்வூதியம் பெறும் சமையலர்கள், அங்கன்வாடி மற்றும் சமையல் உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் இறந்த பின் குடும்பத்தினருக்கு ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.