‘வினை தீர்ப்பான் வேலவன்” என்பது வெறும் வார்த்தை அல்ல. அவரின் அருளால் வினை நீங்கப் பெற்ற அவரது அடியார்களின் அனுபவப்பூர்வ வாக்காகும். அப்படிப்பட்ட முருகனுக்குரிய ஒரு சிறப்பான தினம் ‘சஷ்டி தினம்”. மாதந்தோறும் வருகிற சஷ்டி மிகவும் விசேஷமானது. வழிபாட்டுக்கும், பூஜைக்கும் உரிய அற்புதமான பங்குனி மாத சஷ்டி திதியில் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வது எண்ணற்ற பலன்களைத் தரும்.பங்குனி மாத சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப்பெற ‘சஷ்டி விரதம்” அனுஷ்டிக்கும் முறையையும், அதன் பலன்களைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.
விரதம் இருக்கும் முறை :
சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும். காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் பூஜையறையில் அமர்ந்து ‘கந்த சஷ்டி கவசத் தையோ” வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்க ளால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ஓம் முருகா என்று மனதிற்குள் ஜெபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்.காலையும், மாலை யும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் ஸ்கந்த குரு கவசம் கேட்பதும் இல்லத்தில் நிம்மதியையும், சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் மனத்தெளிவையும் தந்தருளும். இந்த நாளில், அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும். முருகக்கடவுளுக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்கி தரிசிப்பது இன்னும் விசேஷம். செவ்வரளி மலர்கள் சூட்டி மனதார வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவான் வேலவன். வீட்டில் உள்ள முருகப் பெருமானுக்கு மலர்கள் சூட்டி அலங்கரிக்கலாம். எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம் பக்கத்தாருக்கு வழங்கலாம். இவ்வாறு செய்வதால் எதிரிகளை துவம்சம் செய்வார் வெற்றிக்குமரன். எதிர்ப்புகளையெல்லாம் அழித்தொழிப்பார் கந்தகுமாரன். பங்குனி சஷ்டி தினத்தில், வேல் கொண்டு நம்மைக் காத்தருளும் முருகக்கடவுளை வணங்குவோம். வேலுக்கு அரோகரா சொல்லி தரிசிப்போம். நம் வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பான் வெற்றிக்குமரன்.