மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியாக காந்தி மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய பிப்.15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களைத் தோ்வு செய்வது குறித்து, தில்லியில் அக்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வீட்டில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், அக்கட்சி பொருளாளா் அஜய் மாக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்நிலையில், தோ்தலில் ஹிமாசல பிரதேசத்தில் இருந்து போட்டியிட சோனியா காந்தி மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.