
செல்போனில் கேம் விளையாடியதால் படிப்பில் மதிப்பெண் குறைவதாக தாய் கண்டித்ததால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
சென்னை, பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசகிருஷ்ண குமார். மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி சைனஜா என்ற மனைவியும், வைஷ்ணவி (20) ஸ்ரீராம்(14) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீராம் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சமீப காலமாக சிறுவன் ஸ்ரீராம் படிப்பில் கவனம் செலுத்தாமல் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அவனது தாய் கண்டித்து வந்தார். நேற்று இரவும் அது போலவே சிறுவன் ஸ்ரீராம் பாடம் படிக்காமல் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடினான். இதனைக் கண்ட அவனது தாய் தெடர்ந்து கேம் விளையாடுவதால் தான் படிப்பில் கவனம் செலுத்தாமல் மதிப்பெண் குறைகிறது என மகனை கடுமையாக கண்டித்தார். இதனால் விரக்தியடைந்த சிறுவன் ஸ்ரீராம், வீட்டில் இருந்த அனைவரும் தூங்கச் சென்ற சமயத்தில் வீட்டின் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தான். இதில் படுகாயமடைந்து வலியால் துடித்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஸ்ரீராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் இறந்த சிறுவன் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்உள்ள குடியிருப்பு வாசிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.