தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை(60). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் செல்லத்துரை சம்பவத்தன்று ஓட்டப்பிடாரம் பஜார் பகுதியில் பண வசூலுக்காக சென்றுள்ளார். இதனை தொடர்ந்து செல்லத்துரை பஜாரில் வசூலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி செல்லத்துரையின் இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதனால் நிலை தடுமாறிய செல்லத்துரை வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் ஓட்டப்பிடாரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் செல்லத்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.