திருநெல்வேலியில் ரூ.56.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 21-ம் தேதி திறந்து வைக்கிறார்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தமிழர்களின் பண்பாடு, ஆரம்ப காலம் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை முதல்வரே தேர்வு செய்தார்.

இந்த அருங்காட்சியகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ம் தேதி அடிக்கல் நாட்டியதுடன் ரூ.56.36 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார். இதற்காக வருவாய்த் துறை மூலம் 13.2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பொதுப் பணித்துறையின் மூலம் மொத்தம் 7 கட்டிடத் தொகுதிகளாக (நிர்வாக கட்டிடம், சிவகளை கட்டிடம், கொற்கை கட்டிடம் ஏ மற்றும் பி, ஆதிச்சநல்லூர் கட்டிடம் ஏ மற்றும் பி, சுகாதார வசதி கட்டிடம்) பிரிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

மலையை ஒட்டி இருக்கும் இந்த இடம் இயற்கையாகவே அழகானது. தோட்டக்கலை நிபுணர்களைக் கொண்டு பூந்தோட்டம் அமைக்கப்படுகிறது.
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதைவிட இது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கொற்கையில் முத்துக் குளித்தலையும், அதன் அபாயங்களையும், முத்துக்கள் எப்படி ரோமாபுரி போன்ற நாடுகளுக்கு சென்றன என்பதையும் பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்தை பார்ப்பதுபோல காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.