
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்துவிட்டு, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி வியாழக்கிழமை தொடங்கினார். பிரதமருக்கு வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
3 நாள் தியானம்: மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தென்மூலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் தியான மண்டபத்தில் வருகிற ஜூன் 1-ம் தேதி வரை தியானம் மேற்கொள்கிறார். முந்தைய தேர்தல்களில் 2014-ல் உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கரிலும், 2019-ல் இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் அவர் தியானம் மேற்கொண்டிருந்தார்.