வயநாடு:
சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக இருந்த வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரமலை பகுதிகள், நிலச்சரிவு காரணமாக இடிந்த கட்டடங்கள், சேறு நிறைந்த பள்ளங்கள், பாறைகள் நிறைந்த விரிசல் நிலமாக காணப்படுகிறது. இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என அவரது உறவினர்கள் தேடி வருகின்றனர்.

வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரமலை ஆகிய நகரங்கள் மக்கள் நடமாட்டம் காரணமாக கடைகள் மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகளால் சூழ்ந்து காணப்பட்டது. உட்புற தோற்றம் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற சூரமலா, சுற்றுலா பயணிகளின் விருப்ப தலமாக இருந்தது.

இங்குள்ள சூச்சிபாரா நீர்வீழ்ச்சி வெள்ளொளிப்பாறை மற்றும் சீதா ஏரி ஆகியவை விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால், நிலச்சரிவு காரணமாக நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.

முற்றிலும் சேறும் சகதியுமாக காணப்படும் இந்நகரங்களில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாறைகள் ஆங்காங்கே கிடக்கின்றன.

பல வாகனங்கள் சேதமடைந்து பாறைகளுக்கு இடையே சிக்கி காணப்படுகிறன.
ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

அதற்கு இடையில் யாரேனும் காயங்களுடனோ, இறந்த நிலையிலோ உள்ளனரா என அவர்களது உறவினர்கள் ஏக்கத்துடன் தேடி வருவது பார்ப்பவர்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்துகிறது.

அவர்களது மனதிலும் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.முண்டக்கை பகுதியில் 450 – 500 வீடுகள் வரை இருந்ததாக தகவல் ஒன்று வெளியான நிலையில், தற்போது 34 – 49 வீடுகள் மட்டுமே உள்ளதாக தெரிகிறது.