
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை குவித்திருந்தனர். இதன்மூலம், சேஸிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நிதானமாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணி முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவின் கேப்டனும், தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் 98 பந்துகளில் 101 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பந்துவீச்சில் இந்திய வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். இதனால், 45.3 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்த நிலையில், 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது