தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறையால் ஜிஎஸ்டி சாலை – சரவணா ஸ்டோர்ஸ் சந்திப்பு மற்றும் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் மண்டல அலுவலக சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, 9.11.2023 முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
புதிய போக்குவரத்து மாற்றங்கள் பின்வருமாறு:

  1. ஜிஎஸ்டி சாலை – சரவணா ஸ்டோர் சந்திப்பு: ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் யு டர்ன் செய்து சென்னைக்கு செல்லவும், அதே போல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் யுடர்ன் செய்து தாம்பரம் நோக்கிசெல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அதற்கு பதிலாக பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஐடி மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம்.
    தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம்.
  2. ஜிஎஸ்டி சாலை – பல்லாவரம் மண்டல அலுவலக சந்திப்பு: ஜிஎஸ்டி சாலையில் கிண்டி, பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் பல்லாவரம் மண்டல அலுவலக சந்திப்பில் யுடர்ன் செய்து சென்னைக்கு செல்லவும், வலதுபுறம் திரும்பி பல்லாவரம் மண்டல அலுவலக சாலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் பல்லாவரம் மண்டல அலுவலக சந்திப்பில் யுடர்ன் செய்து, தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஐடிமேம் பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம்.
    தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம்.
    இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.