
தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று (நவ.27) வடமேற்காக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று, அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை (நவ.28) கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பரவலாக டிச.2-ம் தேதி வரை மழை நீடிக்கும்.