
– அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர்
‘சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்’, மறைந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பலர் புகழ்பெற காரணமாக இருந்தது. அதன் நிறுவனரான மறைந்த டி.ஆர்.சுந்தரம், திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர்.
மேற்சொன்ன தலைவர்கள் அனைவராலும், ‘முதலாளி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.
பாரம்பரியமிக்க மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், முதல்வர் ஸ்டாலின் அந்த வளைவு முன் நின்று புகைப்படமும் எடுத்தது, சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
ஆனால், நினைவு வளைவு அமைந்து இருக்கும் இடத்தில், தன் தந்தை கருணாநிதியின் சிலையை அமைக்க, ஸ்டாலின் ஆசைப்படுவார் என்பது யாரும் எதிர்பாராதது.
கருணாநிதி சிலை அமைக்க, முதல்வர் விரும்புவதாக கூறி, நினைவு வளைவு அமைந்திருக்கும் இடத்தை கொடுக்கும்படி, சேலம் கலெக்டர் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. டி.ஆர்.சுந்தரம் குடும்பத்தினர் அதை ஏற்றுக் கொள்ளாததால், நினைவு வளைவு இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என்று கூறி, அரசு ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது.
மேலும், அந்த குடும்பத்தினருக்கு சொந்தமான மற்றொரு பட்டா நிலத்தில் நடக்கும் கட்டுமான பணிகளையும் தடுத்து, எந்தவித முன் அறிவிப்போ, அனுமதியோ இல்லாமல், 50க்கும் மேற்பட்ட போலீசார் அத்துமீறி நுழைந்து இடித்துள்ளதாக தெரிகிறது.கருணாநிதி பணிபுரிந்த இடங்களில் எல்லாம், அவரது சிலையை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை உருவாக்கி, கருணாநிதிக்கு மாத சம்பளம் வழங்கி வாழ்வளித்த சுந்தரத்தின் இடத்தையே ஆக்கிரமித்து, தன் சிலை வைப்பதை கருணாநிதி ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமே.
வேண்டுமென்றால், அறிவாலயத்திலோ, தி.மு.க.,வினர் நடத்தும் கல்வி நிறுவனங்களிலோ, ஆசை தீர தன் தந்தையின் சிலையை ஸ்டாலின் வைத்துக் கொள்ளலாமே… யார் கேள்வி கேட்க போகின்றனர்?
பாரம்பரியமிக்க குடும்பத்தின் சொத்தை ஆக்கிரமித்துதான், ஸ்டாலின் தன் தந்தையின் சிலையை வைக்க வேண்டுமா.?
நாளை, மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர் கருணாநிதி என்று நிறுவ முயற்சியா?
நில ஆக்கிரமிப்பு என்பது தி.மு.க.,வின் பாரம்பரியமாக இருக்கலாம். ஆனால், இனியும் அது செல்லுபடியாகாது என்பதை, முதல்வர் உணர்ந்திருக்க வேண்டும்.
உண்மையாகவே தன் தந்தைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால், நினைவு வளைவு அமைந்திருக்கும் இடத்தில், தன் குடும்பத்திற்கே வாழ்வளித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் சுந்தரம் சிலையை நிறுவுவது தான் முறையாக இருக்கும்.
அதை விட்டு விட்டு, பிறருக்கு சொந்தமான இடத்தில் தன் தந்தையின் சிலையை அமைக்க முயற்சிப்பது, எக்காலத்திலும் அவரது தந்தைக்கோ, அவரது சிலைக்கோ எந்தவித மரியாதையையும் பெற்று தராது.
பொது மக்கள் எல்லா நேரங்களிலும், ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு பொறுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.