சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரத சப்தமி’ ஆகும். இது சூரிய ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். சப்தம் என்றால் ஏழு என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது.
அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராடுவது நல்லது.
இந்த ஏழு எருக்கம் இலைகளையும், கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும்.
கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.
சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.
ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.