மதுரை மாவட்டத்தில் 93சதவீதத்திற்கும் மேல் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கி ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுவதாக அறிவித்திருந்தனர்.

மதுரைமாவட்டத்தில் புதூர் எல்லீஸ்நகர்,பொன்மேனி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர்உள்ளிட்ட 16பணிமனைகளில் இருந்து மொத்தம் 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 93சதவிகிதம் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் வழக்கம்போல் பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் பெரும்பாலான போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர் இருந்த போதும் தற்காலிகமாக 100ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வீதம் தயார் நிலையில் உள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கையை அரசு பொங்கல் பண்டிகைக்கு பிறகு நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கை இருப்பதால் அனைத்து பேருந்துகளும் மதுரைமாவட்டத்தில் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்