மதுரை: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பில் இருந்து ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி அனுசியா மயில் (வயது 27) என்பவருக்கு இன்று(டிச.,20) ஆண் குழந்தை பிறந்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் பெருமாள் மனைவி அனுசியா மயில். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இரண்டாவது முறையாக நிறைமாத கர்ப்பமாக உள்ளார். ஸ்ரீவைகுண்டம் காவலர் குடியிருப்புக்கு தாய் சேதுலட்சுமியுடன் வந்த போது நால்வரும் வெள்ளத்தில் சிக்கினர்.

இதையடுத்து சூலூரில் இருந்து வந்த ஹெலிகாப்டர் மூலம் நான்கு பேரும் மீட்கப்பட்டு மதுரை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் அனுசியா மயில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று கர்ப்பிணி அனுசியா மயிலுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.