
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு, வட மாநில வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக, மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீவிர ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு வெள்ளை நிற ‘பாலீதின்’ மூட்டையில், ‘பாப்கார்ன்’ விற்கும் நபர்போல் அப்பகுதியில் சுற்றிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால், அவர் வைத்திருந்த ‘பாலிதீன்’ மூட்டையை போலீசார் சோதித்த போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அந்த வாலிபர் திரிபுரா மாநிலம், செப்பாகிஜலா மாவட்டம், சோனமுரா தாலுகா, இன்டுரியா கிராமத்தை சேர்ந்த ஜிபன் சந்த்ரா டெப்நாத், 29, என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்த 21 கி., கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜிபன் சந்த்ரா டெப்நாத், அசாம் மாநிலத்தில் கஞ்சா வாங்கி, அதை ரயில் வாயிலாக சென்னைக்கு கடத்தி, கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.