பிரியங்கா மீண்டும் உ.பி. அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்தமுறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. இங்கு கடந்த 2004 முதல் தொடர்ந்து எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகி விட்டார். இதனால் பிரியங்காவை அங்கு தொடரவைக்க காங்கிரஸ் விரும்புகிறது.

இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்புள்ளது.

அமேதியில் ராகுல் காந்தி, மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கான அடிப்படை வேலைகளை காங்கிரஸுக்காக ஒரு தனியார் நிறுவனம் அமேதியில் செய்து வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ராகுல் முடிவு செய்வார்.

உ.பி.யில் கடந்த மாதம் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரையில் அமேதி முக்கிய இடம் பிடித்தது. எனினும் கடந்தமுறையை போல் அவர் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றாகவே அமேதி இருக்க வாய்ப்புள்ளது.

உ.பி.யின் 80 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகள் பெற்று சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அமேதி தேர்தல் அமைப்பாளராக ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தேவானந்த் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி.யில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதியும், ரேபரேலியும் சிறப்பு கவனம் பெற்றுள்ளன.