பலகோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்- நீதிபதி.

17ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர்
கோவில் திருவிழாவிற்கு தேர் வெள்ளோட்டம் நடத்தி, தயார்நிலையில் வைக்கக்கோரி கடந்த 2019 ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அறநிலையதுறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் இந்த கோவிலில் திருவிழாவையொட்டி நடக்கும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். தற்போது இந்த கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர், கோவில் சுற்றுப்பகுதிக்கு கொண்டு வந்து வெள்ளோட்டம் பார்க்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்களை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த மாதம் 3 ஆம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை திடீரென தள்ளி வைத்துள்ளதாக கூறுகின்றனர். கோவில் திருவிழா நெருங்கி வருவதால், விரைவாக தேர் வெள்ளோட்டம் நடத்தி, தயார்நிலையில் வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,
அப்போது அறநிலையத்துறை தரப்பில், “கண்டதேவி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் விரைவில் நடத்தப்படும். அதன்பின் 2020, ஏப்ரல் மாதம் நடக்கும் கோவில் திருவிழாவில் தேரோட்டம் நடப்பதற்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று கூறப்பட்டது.

அதனை பதிவு செய்து கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம், வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்மனுவில் கூறப்பட்டத்தை நிறைவேற்றாத்தை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது..

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது,

அப்போது, தேர் தயாராகி விட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர் தயாராக உள்ளது. பல பிரிவினர் பிரச்சனை செய்வதால் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமாதான கூட்டம் நடத்த அதிகாரிகள் முயற்சி மெற்கொண்டனர். பதட்டமான சூழல் இருப்பதால் காலதாமதம் ஆவதாக வாதிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நீதிபதி,

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் பல பிரிவினருக்கிடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்கிற சூழல் வருத்தத்திற்குரியது.

பிரச்சனைக்குரிய பிரிவினர்களை அழைத்து அரசு ஒரு கூட்டம் கூட நடத்தக்கூட முடியாதா?

பலகோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்.

அரசின் நடவடிக்கைகளில் ஒரு சதவீதம் கூட திருப்தியில்லை. மாநில அரசால் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியவில்லையென்றால் மத்திய அரசு படையை கொண்டு நடத்த உத்தரவிடலாமா?

அனைத்து பிரிவு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் நெருங்கி விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது என அரசு கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.

மாநில அரசால் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால் மத்திய துணை இராணுவ உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா என கேள்வி எழுப்பிய நீதிபதி,

வரும் 17ம் தேதி தேர் வெள்ளோட்டத்தை நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.