
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் மீது பொதுவிநியோக திட்டத்துக்காக உணவுப்பொருள் கொள்முதலில் முறைகேடு செய்ததாக வா.புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணையில், ‘முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, காமராஜ் மீதான 3 புகார் மீது விரிவான விசாரணை நடத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு, வா.புகழேந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.