திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தெற்குபாளையம் ஏடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவருக்கு அருக்காணி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் கணவர் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் செல்வராஜ் தனது மனைவியுடன் வீடு கட்டுவதற்காக திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு லட்சம் கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் தவணைத் தொகை செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு ஆளான செல்வராஜ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது இடது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தவணைத் தொகை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய தனியார் நிதி நிறுவன ஊழியரான சதீஷ் என்பவர் தினந்தோறும் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு அடவாடி செய்துவந்ததாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று காலை செல்வராஜின் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர் சதீஷ் வீட்டின் நடுவே அமர்ந்து கொண்டு தவணைத் தொகையை கொடுத்தால் தான் வீட்டை விட்டு வெளியே செல்வேன் என்றும் இல்லாவிட்டால் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி செல்வராஜை தூக்கி வெளியே வீசிவிட்டு வீட்டின் கதவை பூட்டி சென்று விடுவதாகவும் கூறி அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக தனியார் நிதி நிறுவன ஊழியரின் அடாவடியால் மனம் உடைந்த அருக்காணி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியரின் அடாவடியால் இடது காலை இழந்த செல்வராஜ்ன் மனைவி அருக்காணி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.