இஸ்ரேல் – ஹமாஸ் இடையே களத்தில் நேரடியாக மோதல்தொடங்கியிருக்கும் நிலையில் இருபக்கமும் கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஹமாஸின் ஆயுதக் குழு, செவ்வாய்கிழமை (அக்.31) வெளியிட்டுள்ள குறிப்பில் தங்களின் பிடியில் இருக்கும் வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாள்களில் விடுவிப்பதாகவும் தரைவழியே முன்னேற தொடங்கியிருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கு காஸா மரணக்குழியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது.

“இடையீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாட்களில் விடுதலை செய்வோம். எதிரிகளின் படைவீரர்கள், அரசியல் மற்றும் ராணுவ தலைமை ஆகியோருக்கு காஸா மயானமாகவும் புதைகுழியாகவும் மாறும்.” என அல்-காஸம் பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபேதா தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பிடியில் 240 பிணைக்கைதிகள் இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. அவர்களில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில் வான் வழி தாக்குதலையும் தரை வழி தாக்குதலையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருகிறது, இஸ்ரேல்.

இதுவரை காஸாவின் அமைச்சகம் சார்பில் 8,525 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3500 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது.