
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக இவரது மருத்துவ அறிக்கைகள், மருத்துவ மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. .
கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சிந்து எனும் மருத்துவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்து, அதே திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் போன்றவை இருந்துள்ளது. அதற்கான மருந்துகளை எடுத்து வந்துள்ளார். இருந்தும் காய்ச்சல் குணமாகாத காரணத்தால், நேற்று அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையிலேயே உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலுக்கான சோதனைகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அவற்றில் எதுவுமே இல்லை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இருந்தும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்த வேளையில் இன்று அதிகாலை சிந்து உயிரிழந்துள்ளார். தீவிர காய்ச்சல் காரணமாக பயிற்சி மருத்துவர் உயிரிழந்த விவகாரம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.