திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்.18ம்தேதி முதல் 26ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் 2 பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது. அதற்கான போஸ்டர் வெளியீடு விழா ஏழுமலையான் கோயில் முன்பு நேற்று நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி தர்மா வரவேற்றார். அப்போது, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் பேசியதாவது:

செப்டம்பர் 18ம்தேதி வருடாந்திர பிரமோற்சவத்தின் முதல் நாளான்று மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார். வருடாந்திர பிரமோற்சவம் செப்டம்பர் 18ம்தேதி முதல் 26ம்தேதி வரையிலும், நவராத்திரி பிரமோற்சவம் நவம்பர் 15ம்தேதி முதல் 23ம்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தின்போது விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. மேலும், வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அறைகள் முன்பதிவு, அன்னப்பிரசாதம், லட்டுகள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியையொட்டி மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி, இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மஹாமுனி ஜெயந்தியை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.