
அப்போது சென்னை ஓபன் போட்டி என்று நினைவு அதில் வென்ற ஏழெட்டு வயதேயான குட்டி பையனாக நெற்றி நிறைய விபூதியோடு குறும்புத்தனமாகப் பேசினான். பேட்டி முழுக்க அவனுடைய அம்மாதான் அதிகமும் பேசி இருப்பார்.
அப்போதே மகனை விட அந்த அம்மாவுக்குதான் நீண்டகால கனவுகளும் ஆர்வமும் திறமைசாலியான தன் மகனை விஸ்வநாதன் ஆனந்தைப்போல ஆக்கவேண்டும் என்கிற இலக்கும் இருந்தன. அதை அந்தப் பேட்டியிலும் சொல்லி இருப்பார். இந்தப்படத்திலும் அந்த அம்மாவின் ஆர்வத்தைப் பார்க்க முடியும். தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் தன் மகனின் கனவுகளுக்கே ஒப்புக்கொடுத்தவரின் தொடக்ககாலம் அது.
அவனுடைய அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு முழுவதுமாக அவனை சதுரங்கத்துக்கு ஒப்புகொடுத்தார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த பையனை மேலும் மேலும் முன்னேற்ற ஒவ்வொரு சர்வதேச போட்டிக்கும் ஸ்பான்சருக்காக அலைந்து திரிந்த அந்த அன்னையின் அலைச்சலைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தனை அலைச்சல்களிலும் ஒருநாளும் மனதை தளரவிடாது விடாப்பிடியாக இருந்தார். எல்லா கதவுகளையும் தட்டிக்கொண்டே இருந்தார்.
இன்று மகன் மிக பெரிய உயரத்தை எட்டி இருக்கிறான். இரண்டாமிடம் என்றாலும் பிரக்யானந்தா எட்டி இருக்கிற உயரம் மிகப்பெரியது. அந்த உயரத்திற்கு பின்னால் நாகலட்சுமி என்கிற அந்த அம்மாவின் உதிரமும் உழைப்பும் இருக்கிறது.