
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நீட் தேர்வுக்கு எப்போது விலக்களிப்பீர்கள் என்று பெற்றோர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியதால் ஆளுநர் ரவிக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ரவி பதிலளித்தார். மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் தனக்கு இருந்தாலும், விலக்கு அளிக்க மாட்டேன் என்றும் ரவி பேசினார்.
பணம் இருந்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்றும், பயிற்சி மையங்களுக்குச் செல்வதைத்தான் நீட் தேர்வு கட்டாயமாக்குகிறது என்றும் பெற்றோர் சுட்டிக்காட்டிப் பேசினர்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிகக் காட்டமாகக் கேள்வியெழுப்பிய பெற்றோரை, உட்காருங்கள் என்று மிகவும் சப்தமாகக் கூறினார் ஆளுநர் ரவி. மேலும், நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்றும் திட்டவட்டமாகக் கூறியதால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் பேசிய ஆளுநர் ரவி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, தமிழக மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறியாக்கும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை படித்து தேர்ச்சி பெற முடியும் என்றால், நீட் தேர்விலும் தேர்ச்சி பெறலாம். மாணவர்களுக்கு பாடங்களை நடத்தும்போதே, நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கலாம் என்றார்.
இதைக் கேட்ட பெற்றோர், நீட் தேர்வு இல்லாமலேயே, தமிழக மாணவர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாடு, இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குவதாக பெற்றோர் நேருக்கு நேர் பதிலடி கொடுத்தனர்.
ஆளுநர் மாளிகையில் உள்ள அரங்கில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது, ஆளுநர் ரவியிடம், நீட் தேர்வு குறித்து பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதால், அவர்களிடமிருந்து மைக் பறிக்கப்பட்டது.