
தருமபுரி: தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் அவருக்கு அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.