காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியில் வாசுதேவன் மற்றும் சுரேஷ் ஆகியோர் இணைந்து டே பைடே எனும் நிதி நிறுவனத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கினர். இதில், இருவரும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். ரூ.1 லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்களுக்கு நாள்தோறும் ரூ.1,500 வீதம் பணம் அளிக்கப்படும் எனவும், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் ஏஜெண்ட்களுக்கு நாள்தோறும் 500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது, முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நபருக்கு 2 கிராம் தங்க நாணயம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதனால், காஞ்சிபுரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் இந்நிறுவனத்தில் சுமார் ரூ.24 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 6 மாதங்கள் முறையாக பணம் கொடுக்கப்பட்ட நிலையில், பின்னர் முறையான பதில் தெரிவிக்காமல் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தையே காலி செய்துவிட்டு இயக்குநர்கள் தலைமறைவாகினர்.
இதனால், ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களுடன் புகார் அளித்திருந்தனர். மேலும், சிலர் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்பைடையில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவன இயக்குநர்களான வாசுதேவன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் வலைவீசி தேடிவந்தனர்.
இந்நிலையில், இயக்குநர்களில் ஒருவரான வாசுதேவன் கிருஷ்ணகிரியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் அங்கு விரைந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவரை சுற்றி வளைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் சுரேஷ் தனது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்திற்கு வந்தபோது போலீசார் கைது செய்தனர். 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.