
சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் ரூ.5 ஆயிரம் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசும் 5000 ரூபாய் உதவி தொகை வழங்குவதாக அறிவித்தது. இதன்படி ரூ.10 ஆயிரம் வெகுமதி அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும் போது, சாலை விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்று அறிவித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் , சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றுவதற்காக வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்ததொகையை பெறுவதற்கு, சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும். அவர்கள் குறித்த விவரங்களை காவல்நிலையம் அல்லது மருத்துவமனையிடம் பெற்று மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி தொகையை பெற தகுதியானவர்கள் குறித்த பரிந்துரையை மாதந்தோறும் போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவரின் வங்கிக் கணக்கில் ஆணையரகம் வாயிலாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்படும். தங்களது அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ள விரும்பாதவர்களுக்கு வெகுமதி வழங்கப்படாது என்றும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுமதியைப் பெறுவதற்கு சில வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உயிர்களை காப்பாற்றுவோருக்கு விபத்து எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால் அவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும், ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் ரூ.5 ஆயிரம் பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அத்துடன், ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.. இந்ததிட்டம் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்து உள்ளார்.