புதுடெல்லி: அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்கே மிஸ்ராவுக்கு 3வது முறையாக ஒன்றிய அரசு பதவி நீட்டித்ததை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் ஜூலை 31 வரை பதவியில் நீடிக்க கெடு விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு 3 முறை அவருக்கு ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. 62 வயதான சஞ்சய் குமார் மிஸ்ராவின் சொந்த மாநிலம் உத்தரபிரதேசம். 1984ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியான அவர் டெல்லியில் உள்ள வருமானவரித்துறை தலைமை கமிஷனராக இருந்தார். அவர் 2018 நவம்பர் 19ம் தேதி அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
இந்த பதவி 2 ஆண்டுகள் வகிக்கக்கூடியது. அவரது பதவிக்காலம் முடிந்தபின் 2020 நவம்பர் 13ம் தேதி மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அந்த காலமும் முடிந்த பின்னர் 2021 நவம்பர் 17ல் மேலும் ஓராண்டு நீட்டிப்பு வழங்கியது. அதோடு இனிமேல் அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று ஒன்றிய அரசு திருத்தி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம்நாத், சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஏற்கனவே அமலாக்கத்துறையை ஏவி ஒன்றிய அரசு பழிவாங்கி வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது ஒரு குறிப்பிட்ட நபருக்கு இதுபோல் தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்குவது சரியானது அல்ல என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ‘‘அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது. அவர் தலைமையில் தற்போது முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமலாக்கத்துறை சட்டத்தை இன்னும் வலுவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நவம்பர் மாதம் முடிவடைந்து விடும். அதுவரை சஞ்சய் குமார் மிஸ்ரா பதவியில் நீடிக்க அனுமதி அளிக்க வேண்டும்” என ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது; அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது. எனவே 3வது முறையாக அவரது பதவியை நீட்டிப்பு செய்ததை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. இருப்பினும் அவர் இந்த மாதம் இறுதி நாளான ஜூலை 31 வரை அவர் பணியில் தொடரலாம்.
ஓய்வுபெறும் வயதை அடைந்த பிறகு அமலாக்க இயக்குனராக பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவி நீட்டிப்பு குறுகிய காலத்திற்கு இருக்க வேண்டும். இதுபோல் 3வது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது 2021ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது. புதிய அமலாக்க இயக்குனரை நியமிப்பதற்கான செயல்முறை சிறிது நேரம் எடுக்கும் என்பதை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். பொது நலன் கருதி பதவி மாற்றம் சுமூகமாக இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் சஞ்சய் குமார் மிஸ்ராவை வரும் ஜூலை 31ம் தேதி வரை பதவியில் நீடிக்க அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- 2018 நவம்பர் 19ம் தேதி அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் நியமிக்கப்பட்ட சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு ஒன்றிய அரசு 3 முறை பதவி நீட்டிப்பு வழங்கியது.
- சஞ்சய் குமார் மிஸ்ரா பதவிக்காலத்தில்தான் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டவர்களையும் அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
- எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்து, அவர்களில் பலரை கைது செய்துள்ளது.
- டெல்லி துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடங்கி தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி வரையிலும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
- சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்கள் 5 ஆண்டு பதவியில் நீடிக்க அனுமதி
சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்கள், டெல்லி போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் பதவிக்காலம் 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தி ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்திலும் அதை நிறைவேற்றியது. இந்த மசோதாவை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவையும் சேர்த்து விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் 5 ஆண்டு பதவியில் நீடிக்க அனுமதி அளித்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வருமாறு: மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (திருத்தம்) சட்டம் 2021, டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன (திருத்தம்) சட்டம் 2021 ,அரசாங்கம் வழங்கக்கூடிய அடிப்படை (திருத்த) விதிகள் 2021 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களை நாங்கள் ஏற்கிறோம்.
இதன்படி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இனிவரும் காலங்களில் 2 ஆண்டுகளுக்கு பதில் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கலாம். மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்களுக்கு 5 ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கும் விவகாரங்களில் நீதித்துறை தலையிட தேவையான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. இருப்பினும் இதில் எந்தவித விதிமுறை மீறலும் இல்லை என்பதால் 5 ஆண்டு பதவி நீட்டிப்புக்கான அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். ஆனால் ஓய்வு பெற்ற வயதிற்குப் பிறகு அதிகாரிகளின் பணி நீட்டிப்பை இனிமேல் ஒன்றிய அரசு மிகவும் அரிதாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.