தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் ஆவணப் பதிவு, முத்திரைத் தீர்வை, பொது அதிகார ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பத்திரப் பதிவுத் துறை சேவைக் கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தைப் பாதுகாத்தல், மின்னணு வாயிலாக ஆவண நகல் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20 இனங்களுக்கான கட்டணங்கள் மற்றும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

பத்திரப்பதிவு சேவை பழைய கட்டணம் புதிய கட்டணம்

ரசீது ஆவணப் பதிவு ரூ.20 ரூ.200

குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000 ரூ.10,000

முத்திரைத் தீர்வை ரூ.25,000 ரூ.40,000

தனி மனை பதிவு ரூ.200 ரூ.1000

குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 சொத்து மதிப்பில் 1%

ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாயாகவும்,

தனி மனை பதிவு கட்டணம் 200-ல் இருந்து ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் 10 ஆயிரம் என்று உள்ளதை, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றப்பட்டுள்ளது.

இதனால்நிலம், வீடு, வீட்டு மனை உள்பட சொத்துக்களின் விலை உயரும் ஆபத்தும் உண்டாகியுள்ளது.